Pages

Tuesday, June 3, 2014

For Raw Food Seekers in Chennai

I thought it is worth for Sharing:

காட்டுத்தேன், சிறுதானிய சேமியா, கருப்பரிசி: இயற்கை விளைபொருட்களில் கலக்கும் சென்னை
சென்னையில், தற்போது இயற்கை உணவு சார்ந்த விழிப்புணர்வு பரவலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்சென்னையில் அதற்கென பிரத்யேக கடைகள் உருவாகி வருகின்றன.
அடையாறில் உள்ள, 'விதை இயற்கை அங்காடி', அந்த பகுதி மட்டுமல்லாது, சென்னை முழுவதும் பிரபலமாகி விட்டது.
அதன் உரிமையாளர், அருணிடம் பேசியதில் இருந்து...
இயற்கை உணவுகள் என்றால் என்ன, அவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும்?
விளைவிக்கும் போது, நன்மை செய்யும் உயிர்களுக்கு தீங்கு செய்யக் கூடாது. விளை பொருளை உண்ணும் மனிதனுக்கு, பக்க விளைவுகள் ஏற்படக் கூடாது. அப்படிப்பட்ட உணவுதான் இயற்கை உணவு. அதாவது, செயற்கை உரமிடாத, விளை பொருள்.இயற்கை உணவு, நமது பாரம்பரியமாக வருவதால், நமது நாட்டின் தட்பவெப்பத்திற்கு ஏற்றது; சத்து மிக்கது; நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது; திருப்தி தருவது. அதனால், மருத்துவத்துக்கு செலவழிப்பதற்குப் பதில், ஆரோக்கிய உணவுக்கு செலவழிக்கலாம்.
'விதை' இயற்கை அங்காடி, முளைத்ததன் பின்னணி என்ன?
பத்தாண்டுகளுக்கு முன்னால், நாகப்பட்டினத்தில் இருந்த என் நண்பனின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு, அவன், எனக்கு ஒரு மாம்பழம் கொடுத்தான். அதன் சுவையையும், மனத்தையும் அதற்கு முன்பு நான் அனுபவித்ததில்லை. அவன் வீட்டு உணவும் அற்புதமாக இருந்தது. காரணம் கேட்டேன். 'நாங்கள், வயலுக்கு செயற்கை உரம் இடுவதில்லை' என்றான்.
பிறகு, சென்னையில், அப்படிப்பட்ட உணவுக்காக அலைந்து, ஏமாந்தேன்.படிப்பு வேலை என்று அடுத்தடுத்த தளங்களில் பயணித்த போதுதான், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன் பழகும் வாய்ப்பும், பயிற்சி பெறும் வரமும் கிடைத்தன. ஏற்கனவே, மனதுக்குள் உறங்கிக் கிடந்த, 'இயற்கை உணவு ஆர்வம்' எனும் விதையை, அவரது சந்திப்பு நீர் வளர்த்தது.ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், நான் பார்த்துக் கொண்டிருந்த மென்பொருள் துறை வேலையையும், அதனால் கிடைத்த அமெரிக்க வாய்ப்பையும் உதறினேன். அடையாறில், 'விதை' அங்காடி முளைத்தது.சமூக வலைதளங்களில், உணவின் தன்மை, நன்மைகளை விளக்கினேன். எனது, 'தமிழ் ஸ்டுடியோ' அமைப்பின் மூலம், இயற்கை விவசாயத்தின் தேவையையும், அவசியத்தையும் குறும்படங்களாக எடுத்து, மக்களிடம் தெளிவுபடுத்தினேன்.இப்போது, 'விதை' தழைத்துக் கொண்டிருக்கிறது.
அங்காடிக்கு, பொருட்கள் எங்கிருந்து வருகின்றன?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில்இருந்தும் வருகின்றன. மலைத் தேன், காட்டுத் தேன், சிறுதானிய மாவு, சேமியா, கருப்பரிசி, சிவப்பரிசி, மஞ்சள் கிழங்கு, மூலிகைப் பொடிகள், இவை, 'விதை' அங்காடியில் கிடைக்கின்றன.மென்பொருள் வேலையையும்,
அமெரிக்க வாய்ப்பையும் இழந்ததற்காக வருந்தியதுண்டா?
ஒருபோதும் இல்லை. வெறும் ஊதியத்துக்காக வேலை செய்த போது கிடைக்காத திருப்தியும், தேடலும் இப்போதுதான் கிடைக்கிறது.
எதிர்கால திட்டம்?
இப்போது இருக்கும் சூழலில், இயற்கை விளைபொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது.அதனால், மேல்தட்டு, நடுத்தர மக்கள் மட்டுமே பயன் பெறுகின்றனர். அந்த நிலை மாறி, எல்லாருக்கும் சிறுதானியங்கள் கிடைக்க வேண்டும். அதற்காக, இயற்கை ஆர்வலர்களையும், அரசையும் ஒன்றிணைக்க வேண்டும்.எதிர்காலத்தில், அங்காடிகளில் குறைந்த விலையில், தரமான இயற்கை உணவுகள் ஏழைகளுக்கும் கிடைக்கவேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். தொடர்புக்கு: 80562 01888
செக்கெண்ணெய் கைத்தறி துணி வேண்டுமா?
கொட்டிவாக்கத்தில், இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவே, 'ரீஸ்டோர்' அங்காடி செயல்படுகிறது.அதன் உரிமையாளர்களில் ஒருவரான, ராதிகா,45, கூறியதாவது:
இங்கு, செவ்வாய், சனிக் கிழமைகளில் காய்கறிகளும், எல்லா நாட்களிலும் பழ விற்பனையும் உண்டு. இயற்கை மருந்து வகைகள், ஆயத்த உணவுகள், மாவுகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள் என, பல உணவு வகைகளும் உள்ளன.நாட்டுப் பருத்தி நூலில், கைத்தறியில் நெய்து, இயற்கை சாயமிடப்பட்ட துணி வகைகளும் உண்டு. அடுத்ததாக, சிறுதானிய உணவு சமையலை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். முடிந்த அளவு, பிளாஸ்டிக் இல்லாத சென்னையை காணவேண்டும். அதற்கான விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும். இன்னும், பல கனவுகள் உண்டு. காலம் கனிந்தால் அவை சாத்தியப்படும் என, நினைக்கிறேன்.
தொடர்புக்கு: 98844 09566

Courtesy : Facebook